Wednesday, March 18, 2009

நிகழ்தகவு


கடைசிநாள்
"முகவரி வேண்டும்" என்றாள்.
ஆட்டோகிராப் புத்தகத்தில்
எழுதிக்கொண்டே கேட்டேன்.
"எதற்கு எதெல்லாம்...
கடிதம் எழுதுவாயா நீ ..?"
"நிச்சயம் எழுதுவேன்"
உறுதியாகச் சொன்னாள்.
புன்னகைத்துப் புத்தகம் கொடுத்தேன்.

ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
எல்லாம் வேஷம்;
சொன்னதெல்லாம் பொய்.

வெகுநாள் கழித்து
வேறோர் ஊரில் எதிர்பட்டாள்.
"ஐயோ..! நம்பவே முடியலை...
எவ்வளவு சந்தோஷமாயிருக்கு...
உன்னைப் பார்க்க" என்றாள்."
போதும் நிறுத்து
பொய் வார்த்தை பேசாதே..!"
வெடித்தேன்.

"உன் கோபம் புரிகிறது
மன்னித்துவிடு.
உன்னைப்போல்
முற்போக்கு குடும்பமில்லை எனது.
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லி
அவர்கள் முன்னால்
கடிதம் எழுதுவதும் சாத்தியமில்லை.
புத்தகங்களில் உன் கவிதை படிக்கிறேன்.
தொலைபேசியில் குரல் கேட்கிறேன்.
கடிதங்களால் தன்னம்பிக்கை கொள்கிறேன்.
எப்போதும் போல்
எழுது- பேசு-
என்னை மறந்துடாதே"
சொல்லி நடந்து புள்ளியானாள் தோழி.

ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
என்றேனும் எழுதுவாள்...
ஆண்-பெண் நட்பு புரிந்த
அண்ணனோ தம்பியோ
கணவனோ மகனோ
பேரனோ வாய்க்கும் நாளில்.

-துறையூர் மணி
ஓவியம்: Phyllis Rash Hughes


எனது "நிகழ்தகவு" கவிதை 03-08-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.

Saturday, March 7, 2009

தொக்கி நிற்கும் கேள்விகள்


* சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

* கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

* வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

* எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

* இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

* கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

* நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

* நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

* சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

* அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

* பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

* குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

* எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...

-துறையூர் மணி


எனது "தொக்கி நிற்கும் கேள்விகள்" கவிதை
23-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது

அம்மா

படிப்புக்காக நானும்
என் செலவுக்கு
பணம் சேர்க்க நீயும்
தூரங்களில் சுவாசிக்கிறோம்.

நாகரீகத்தில் செழிக்கும்
என் நல்ல நண்பன்
வாரம் இருமுறை
தன் வீட்டுக்கு கடிதம் எழுதுகிறான்.
அன்னையர் தினத்தன்றும்
அம்மாவின் பிறந்தநாளன்றும்
அழகிய வாழ்த்து அட்டைகள் அனுப்பி
தன் அன்பைச் சொல்கிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது
எனக்கும் ஆசைதான்
தேடித்தேடி தேர்வுசெய்து
வாழ்த்து அட்டைகள் அனுப்பவும்
நெக்குருகி நான் எழுதும்
கடிதங்களையும் கவிதைகளையும்
நீயே படித்து நெகிழ்ந்துணர்வதைப் பார்க்கவும்.

அனால் அம்மா...
கஷ்டப்பட மட்டுமே கற்றிருக்கும் நீ
கொஞ்சம் கல்வியும் கற்றிருக்கக் கூடாதா?

-துறையூர் மணி


எனது அம்மா கவிதை www.ambalam.com June 2001 -ல் பிரசுரமானது.

Thursday, March 5, 2009

இதயத்துடிப்பும் பாதச்சுவடும்


இளவேனிற் காலத்தில்
திரும்பி வருவதாய்
சொல்லிப்போனாய்
ஊதாப்பூக்களோடு
உனக்காக காத்திருந்தேன்
இலையுதிர்காலம் தொட்டே

இலைகள் உதிர்ந்து
இளவேனிலும் வந்தது
நீ மட்டும் வரவே இல்லை
இதயம் கனத்துக் காத்திருந்தேன்
இன்னும் பல பருவங்கள்
அதன் பிறகும் நீ வரவே இல்லை

பிறகுக்கும் பிறகு வந்த
மற்றொரு இலையுதிர் காலத்தில்
இலைகளோடு சேர்ந்து
நானும் உதிர்ந்து போனேன்
கடைசி விருப்பமாக
நீ வரும் வழியிலேயே
என்னை விதைத்திருக்கிறார்கள்

நீ உணராமல் போன
என் இதயத்துடிப்பைப் போல் அல்ல
உன் பாதச்சுவடுகள் கூட
எனக்குப்புரியும்
என்றைகாவது நீ
என்னைத் தேடி வருவதை
சருகுகள் சொல்லும்போது
நான் விழித்துக்கொள்வேன்
அது ஒரு இளவேனிற்காலமாய் இருக்கும்.

-துறையூர் மணி


குறிப்பு:எனது இந்த கவிதை JULY 1998 "குமுதம் ஸ்பெஷல்" மாத இதழில் திரு.மாலன் அவர்கள் ஆசிரியராக பணியாற்றியபோது பிரசுரமானது.

இடைவெளி


மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு
கொட்டாவி விட்டபடி
"அதெல்லாம் ஒரு காலம்" என்று
அப்பா சொல்லும்போது அதன்
அர்த்தம் புரியாது எனக்கு

இன்று சாரலின் சலசலப்பில்
நிலைப்படியில் நின்று
முகத்தை நீட்டி
மூக்கை மட்டும் நனையவிட்டு
கதகதப்புக்காக கட்டிய கை அவிழ்த்து
ஒரு கை நீட்ட
உள்ளங்கையில் விழுந்த சிறு துளியின் சிலிர்ப்பு
உடலெல்லாம் பரவி உச்சந்தலை வருட
வானவில்லாய் வளைந்த நினைவுகளில்
கத்திக்கப்பல் விட்டதும்
கண்ணாமூச்சி விளையாட்டும்
கண்முன் நிழலாடும்
"அதெல்லாம் ஒரு காலம்"


-துறையூர் மணி

எனது "இடைவெளி" கவிதை 27-04-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது