Monday, September 22, 2014

மூன்றாவது நபர்

புதிதாக சென்னைக்கு வந்த நண்பர் என்னிடம்…

நண்பர்: மணி சிலம்பம் பற்றி பழைய தமிழ் புத்தகங்கள் எல்லாம் படிக்கணும். எந்த லைப்ரரியில கிடைக்கும்?
நான்: கன்னிமரா போங்க நிறைய புத்தகங்கள் கிடைக்கும்.
மூன்றாவது நபர்: அய்யே அங்கேல்லாம் போகாதீங்க. அங்கே ஏஸியே கிடையாதுங்க.
நான்: கன்னிமரால நீங்க உறுப்பினரா இல்லைன்னாலும் ஜெராக்ஸ் போட்டுக்குற வசதி செஞ்சிருக்காங்க. வேண்ம்னா சில பக்கங்களை ஜெராக்ஸ் போட்டுக்கலாம்.
மூன்றாவது நபர்: அங்கே இருந்த புத்தகங்களை எல்லாம் எல்லாரும் திருடிட்டு போயிட்டாங்க. நீங்க சொல்றமாதிரி அரிதான புத்தகங்கள்லாம் அங்கே இருக்காது.
நான்: அங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்காங்க. அப்டீல்லாம் திருட்டிட்டு போக முடியாது.
மூன்றாவது நபர்: நான் சொல்றது அதுக்கும் முன்னாடி
நான்: கன்னிமரா போங்க. அங்கே புத்தக தலைப்பு, ஆசிரியர் பெயர் எல்லாம் கம்ப்யூட்டர்ல பதிவு செஞ்சு வச்சிருக்காங்க. நீங்க விரும்புற தலைப்பு புத்தகத்தை சீக்கிரமா தேடி எந்த Rack எந்த Row-ன்னு சுலபமா கண்டுபிடிச்சுடலாம்.
மூன்றாவது நபர்: அய்யே அங்கேல்லாம் போகாதீங்க அங்கே ஏஸியே கிடையாது.

இனிமேலும் இந்த உரையாடலைத் தொடரும் எண்ணம் எனக்கில்லை.

Monday, September 1, 2014

அழைப்பு

வெகுநாட்களுக்குப் பிறகு உன்னிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது
நாட்கள் என்றால் நாட்கள் மட்டுமில்லை
ஆறு வருடங்கள், ஏழு மாதங்கள், எட்டுநாட்களுக்கு முன்பு நிகழ்ந்த
நம் பிரிவை நிகழ்த்திய கடைசி உரையாடலுக்குப் பின்
இப்போதுதான் வருகிறது உன் அழைப்பு.
கைபேசியில் உன் பெயர் பார்த்ததும் மனதில் ஒரு மின்னதிர்வு.
என்ன பேசப்போகிறாயோ எதற்காக அழைத்திருக்கிறாயோ
ஆயிரம் எண்ணங்கள் மின்னிச்சென்றன.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும்
உன்னிடம் என் கைபேசி எண் இருப்பது ஆறுதல் தந்தது
எத்தனை வாய்ப்புகள் வந்தபோதும்
எத்தனை முறை கைபேசி தொலைத்தபோதும்
இத்தனை வருடங்களாய் தொடர்பு எண்ணை மாற்றாமல் இருப்பது
என்றேனும் உன்னிடமிருந்து அழைப்பு வரலாம் என்ற நப்பாசைதான்.
இதோ உன்னிடமிருந்து அழைப்பு.
ஆயிரம் தயக்கங்களும், அன்று நிகழ்ந்த உரையாடலின் எதிரொலியும் என் தொண்டை பிசைய
குரல்கம்மி சொன்னேன்
ஹலோ
பதிலில்லை
உன் பிடிவாதம் இன்னும் மாறவில்லையோ?
மீண்டும் சொன்னேன்
ஹலோ
நிசப்தம்
சிறிது நேரம் மெளனித்திருந்தேன்.
எதிர்முனையில் பதிலேதுமில்லை.
ஏதேதோ சத்தம் கேட்டது
ஹலோ
வெகுநாட்களுக்குப் பிறகு தயக்கத்தோடு உன் பெயர் உச்சரித்தேன்.
"-----------"
கண்கள் கலங்கின
உன்னிடமிருந்து பதிலேதுமில்லை.
காற்றாடியின் சத்தமா, தொலைக்காட்சி பாடலா தெளிவில்லை
சிறிதுநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இறுதியாக இன்னொரு முறை ஹலோ சொன்னேன்
பதிலேதுமில்லை.
மனச்சுமையோடு கைபேசியை.அமர்த்தினேன்.
வெறுமையில் மனம் கனத்தது.
எதற்காக அழைத்திருப்பாய்
மனம் மாறிவிட்டாயா?
ஒவ்வொரு சச்சரவுக்குப் பின்னும்
நான் விட்டுக்கொடுத்து போனதுபோல்
இப்போதும் நானே பேசவேண்டும் என நினைக்கிறாயா?
அறையின் குளிர்ச்சியும்
பன்னிரண்டாம் மாடி அலுவலகத்தின்
கண்ணாடி சுவரினூடே தெரியும் மாநகரின் கட்டிடங்களும்
என் மனச்சுமையைக் குறைக்கவில்லை
காற்றில் மிதக்கும் மெல்லிசையும்,
கதவில் உஷ் சொல்லும் குழந்தையின் கண்சிரிப்பும்
சூழலை மாற்றவில்லை.
ஆயிரம் குழப்பங்களோடு
உன் எண்ணை அனிச்சையாய் அழைத்தேன்
அடித்து ஓய்ந்தது
மீண்டும் அழைத்தேன்.
அழைப்பு ஏற்கப்பட்டது
ஹலோ
உன் குரல் தான்.
நான்: எனக்கு கால் வந்துது.
நீ: குழந்தை விளையாடிக்கிட்டு இருந்துது, SORRY.