Friday, January 8, 2010

மொழி


நான் பேசுவது உனக்குப் புரியாது
உன் பாஷையிலோ எனக்குப் பரிச்சயமில்லை
இருவருக்கும் பொதுவான அந்நிய பாஷையிலும்
அன்பைச் சொல்லத் திறமில்லை எனக்கு
வகுப்பில்...
எல்லோரையும் போல்தான் நானும் உனக்கு
ஆனால்...
எப்போதாவது நீ
என்னைப் பார்த்து வீசும் ஒற்றைப் புன்னகை
பொக்கிஷம்தான் எனக்கு

உனக்குத்தெரியுமா..?
நடந்தே பழக்கப்படாத என் கால்கள்
கடும் வெயிலிலும் உனக்காக நடந்து சிவந்தன
நான் நம்பவே மறுக்கும் கடவுளைக் கூட
உன் வெற்றிக்காக மட்டுமே வேண்டத்தொடங்கினேன்
நீ மேடையேறி பரிசு வாங்கும் போது
கண்ணீர்மல்க நான் கைதட்டி மகிழ்ந்ததும்
ஒரு மழைநாளில் உனக்கு குடை தந்து நனைந்ததில்
காய்ச்சல் வந்து நான் கஷ்டப்பட்டதும்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

சோதனைக்கூடத்தில்
கந்தக அமிலத்தை நீ
கைதவறி கொட்டியபோது
என் காலில் பட்டு எரிந்ததை
சொல்லவே இல்லை யாரிடமும்
கடைசி வரை...
என் நட்பும் நேசமும்
புரியாமலே போனதோ
பரவாயில்லை
ஆனால்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு
கடைசிநாள் பிரிகையில்
நெடுந்தூரம் நடந்து பின்
திரும்பிப் பார்த்தாயே
ஏன்..?

- துறையூர் மணி

எனது "மொழி" கவிதை 02-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.

3 comments:

  1. கவிதை நல்லா இருக்குது. பார்வையின் பாஷை புரியாமல் வாய் மொழிக்காக காத்திருந்தே பல காதல்கள் ஒரு தலை ஆகின்றன.

    ReplyDelete
  2. நன்றி நாய் குட்டி மனசு

    ReplyDelete
  3. //கையெழுத்து வாங்கிக்கொண்டு
    கடைசிநாள் பிரிகையில்
    நெடுந்தூரம் நடந்து பின்
    திரும்பிப் பார்த்தாயே
    ஏன்..?//சொல்ல வந்து சொல்லாமல் போன குறிப்புகள். அருமை .

    ReplyDelete