Monday, May 21, 2012

சுமை

ஓரிரவுப் பயணமாய் இருந்தாலும்
இரண்டு பகல் ஓரிரவு நீளும்
தொலைதூரப் பயணங்களாய் இருந்தாலும்
துரத்தும் உன் நினைவுகளை
எதிர்காற்றில் ஊதி உதறிவிடும் எண்ணத்தில்
ஜன்னல் இருக்கைகளையே
தேடித் தேடி அமர்கிறேன்.

புகைவண்டியின்
கனத்த சுவாசம் போல் நீண்டு
நெடுங்காலமாய் என்னை
துரத்திக்கொண்டே தொடர்கின்றன

ஒவ்வொரு பயணத்திலும்
உன் நினைவுகள்

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்..
ஆயிரம் கேள்விகளின்
சுமை அழுத்த
தொடர்கின்றன என் பயணங்கள்..
ஏதேனும் ஒரு வடநாட்டு வழித்தடத்தில்
இருண்ட குகைக்குள்
ரயில் பயணிக்கையில்
வரம் போல்
வைரம் போல்
வனதேவதை போல்
என்னருகில் வந்தமர்வாயா...

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்...

-மணிபாரதி துறையூர்

No comments:

Post a Comment