Sunday, March 11, 2012

எருதின் நோய்


வெய்யில் காலங்களில்
வீட்டுக்கு வருபவர்கள்
ஏசி இல்லையா எனும்போதும்
வேலை கிடைத்தவன்
இன்னுமா இண்ட்டர்வியூக்கு எல்லாம் போறே எனும்போதும்
கார்பைக் வைத்திருப்பவன்
எப்படித்தான் பஸ்லே போறியோ
எனும்போதும்
பழகிப்போய்விட்டது
மெளனமாய் இருக்கவும்
புன்னகைக்கவும்

எனினும்
புன்னகைக்கவோ
பேச்சை மாற்றவோ
கடினமாகத்தான் இருக்கிறது
திருமணப் பத்திரிக்கை வைக்க வந்தவன்
எட்டு வருசமா இதையேதான் சொல்ற
இன்னுமா உனக்கு பொண்ணு தேடுறாங்க
எனும்போது மட்டும்.


-மணிபாரதி துறையூர்

Sunday, August 21, 2011

வாசனை

தலைவலித் தைல வாசனை வரும்போதெல்லாம்
அக்காவின் நினைவு
பல்லி கெக்கரிக்கும் போதெல்லாம்
அம்மாவின் நினைவு
ஆறிய பாலைக் குடிக்க நேரும்போதெல்லாம்
அப்பாவின் நினைவு
ரயில்களைப் பார்க்கும்போதெல்லாம்
அண்ணனின் நினைவு
வாழ்த்து அட்டை வாங்கும்போதெல்லாம்
தோழிகள் நினைவு
மேன்ஷன்களைப் பார்க்கும்போதெல்லாம்
நண்பர்கள் நினைவு

கால ஓட்டத்தில்
இடம் மாறி, திசைமாறி
தூர தூர தேசங்களில்
குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும்
துரத்தும் நினைவுகளில்
மறக்கவே முடியாத மனிதர்கள் 
வந்து வந்து போகிறார்கள்

உள்ளீடற்ற எதிர்மறை நிஜங்களைவிட
எப்போதும் மேலானவை
திரும்பக் கிடைக்காத நேர்மறை நினைவுகளின்
வாசனை

-மணிபாரதி துறையூர்

Monday, March 28, 2011

நத்தை


சுவாரஸ்யம் ஏதுமின்றி
நத்தை போல்
நகர்ந்துகொண்டிருந்த நாட்களில்
நம் சந்திப்பு தீர்மானிக்கப்பட்டது
நம்மை மீறிய சக்திகளால்
அதன் பின் என் நாட்கள்
நம் சந்திப்பை முன்னிருத்தியே திட்டமிடப்பட்டன

நிறைய செலவழித்தேன்
விரும்பி வாங்கினேன் விதவிதமாய்
உடைகள், கண்ணாடி, காலணி
இரண்டு நாட்களாய் உறக்கமில்லை
முடி திருத்திக்கொண்டேன்
மீண்டும் மீண்டும் தலைகோதிப் பார்த்தேன்
அடிக்கடி கண்ணாடி பார்த்தேன்
அடிக்கடி புன்னகைத்தேன்

உன்னிடம் என்ன பேசுவது
ஒத்திகை பார்த்தேன்
கடற்கரை, நிலா, மெல்லிசை, கவிதைகள்
உனக்கும் பிடிக்குமா
என் குரல் உன்னை வசீகரிக்குமா
எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்லும்
என் கண்கள், மீசை உன்னையும் கவருமா
என் perfume உனக்குப் பிடிக்குமா
என்ன உடை அணிவது
புத்தாடையா
எனக்கு மிகவும் பிடித்த உடையா
சிறுபிள்ளைத்தனமான
சின்ன சின்ன குழப்பங்கள்
இதுபோல்
உனக்கும் இருக்குமா..
இருந்ததா...
மீண்டும் குழப்பம்

ஏமாற்றங்கள் எனக்கு புதிதில்லை
எனினும்
நீ எப்படி தாங்கிக் கொள்வாயோ...
நம்மை மீறிய சக்திகளால்
ஒத்திப் போடப்பட்ட நம் சந்திப்பு
இனி ஒருபோதும் நிகழாது
நிகழவே நிகழாதென்பதை

நத்தை போல்
நகரத்தொடங்கிவிட்டது வாழ்க்கை
மீண்டும்...

என் அறையின்
இருண்ட மூலைகளிலேயே
என் perfume, கண்கள், மீசை
விமர்சிக்க யாருமின்றி
மட்கக் கடவது
மட்கக் கடவது


--மணிபாரதி துறையூர்

Sunday, February 13, 2011

பரிசு

உனக்கு பரிசளிக்க
கவிதைகள் ஏதும் 
மீதமில்லை
இனி 
அவசரத்தில் 
அரைகுறையாய்
எழுதும் 
எண்ணமுமில்லை
வேண்டுமென்றால் வா
சேர்ந்து எழுதலாம்
காதலர் தினத்தில்...

No more poems left out

To gift you
Cannot pen
Fragmentary lines
In an urgency
If you need one
Come let us write together
On Valentine’s Day...

Tuesday, August 24, 2010

போராட்டம்


நிராகரிக்கப்படுபவர்களும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்
நிராகரிப்பவர்களின்
சமவெளியிலேயே
வடுக்களோடும்
வலிகளோடும்
வைராக்கியங்களோடும்.

-மணிபாரதி துறையூர்


Tuesday, June 29, 2010

என்ன செய்வது..?

உனது அலட்சியம் ஒன்றும்
புதிதில்லை என்றாலும்
ஒவ்வொரு முறை நீ
எட்டி உதைக்கும்போதும்
துடிதுடித்துப்போகிறது
உன்னையே சுற்றி வரும்
எனது நாய்க்குட்டி மனசு 

Sunday, May 30, 2010

சில நேரங்களில்...

கருப்பு வெள்ளை
தனிமையின்
இருண்ட மூலைகளில்
வழி தெரியாமல்
தவித்து நிற்கும்
பூனைக்குட்டியாய்
மிரண்டு விசும்புகிறது
மனம்...
வகை தெரியாத
வண்ணக் கனவுகளின்
சுமை கூடி சுமை கூடி

Tuesday, May 18, 2010

மழை நாட்கள்









தும்மல்
காய்ச்சலோடு
நினைவுகளையும்
தூசுதட்டி..
மூச்சு முட்ட
வைக்கின்றன
மழை நாட்கள்

Tuesday, January 19, 2010

காத்திராதே


* நாம் சுற்றித் திரிந்த
இடங்களில் எல்லாம்
சற்று அமர்ந்து செல்கிறேன்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
இங்குதான் எங்கேனும்
சுற்றிகொண்டிருக்கும்.

* உன் கனத்த கதவுகளை
அகலத் திறந்துகொண்டு
இருண்ட காலங்களில்
வெளிச்சமாய் வருவேன் நான்
எனினும்...
எனக்காக காத்திராதே.


- மணிபாரதி துறையூர்

Friday, January 8, 2010

மொழி


நான் பேசுவது உனக்குப் புரியாது
உன் பாஷையிலோ எனக்குப் பரிச்சயமில்லை
இருவருக்கும் பொதுவான அந்நிய பாஷையிலும்
அன்பைச் சொல்லத் திறமில்லை எனக்கு
வகுப்பில்...
எல்லோரையும் போல்தான் நானும் உனக்கு
ஆனால்...
எப்போதாவது நீ
என்னைப் பார்த்து வீசும் ஒற்றைப் புன்னகை
பொக்கிஷம்தான் எனக்கு

உனக்குத்தெரியுமா..?
நடந்தே பழக்கப்படாத என் கால்கள்
கடும் வெயிலிலும் உனக்காக நடந்து சிவந்தன
நான் நம்பவே மறுக்கும் கடவுளைக் கூட
உன் வெற்றிக்காக மட்டுமே வேண்டத்தொடங்கினேன்
நீ மேடையேறி பரிசு வாங்கும் போது
கண்ணீர்மல்க நான் கைதட்டி மகிழ்ந்ததும்
ஒரு மழைநாளில் உனக்கு குடை தந்து நனைந்ததில்
காய்ச்சல் வந்து நான் கஷ்டப்பட்டதும்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

சோதனைக்கூடத்தில்
கந்தக அமிலத்தை நீ
கைதவறி கொட்டியபோது
என் காலில் பட்டு எரிந்ததை
சொல்லவே இல்லை யாரிடமும்
கடைசி வரை...
என் நட்பும் நேசமும்
புரியாமலே போனதோ
பரவாயில்லை
ஆனால்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு
கடைசிநாள் பிரிகையில்
நெடுந்தூரம் நடந்து பின்
திரும்பிப் பார்த்தாயே
ஏன்..?

- துறையூர் மணி

எனது "மொழி" கவிதை 02-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.