Saturday, March 1, 2014

மெல்லிசை

என் நெற்றியில் முத்தமிட வேண்டாம்
புருவம் வருடி உறங்க வைக்க வேண்டாம்
முதுகில் படர்ந்து காதைக் கடிக்க வேண்டாம்
பாதங்களை மடியிலேந்தி சொடக்கெடுக்க வேண்டாம்
ஆப்பிள் நறுக்கித்தரவேண்டாம்
தேநீர் தந்து புன்னகைக்க வேண்டாம்
என்னிடம் பேசவேண்டுமென்பதில்லை
என்னை  நீ கவனிக்க வேண்டுமென்பதும்
எனக்கொரு பொருட்டல
நீ இயல்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும்
விரல் கோர்த்து முகம் சாய்க்கும் கதகதப்பும்
நீ மூச்சுவிடும் மெல்லிசையும் போதுமெனக்கு
ஆயிரமாயிரமிருந்தாலும் உன் அருகாமை போல் வருமா?

-மணிபாரதி துறையூர்

Saturday, December 28, 2013

கிரில் கேட்டைப் பிடித்துக்கொண்டு நிற்பவள்

ஓவியம்: இளையராஜா
நான்  (ஹோட்டலுக்கு) சாப்பிடப் போகும் வழியில் ஒரு தங்கும் விடுதி. அங்கே ஒரு பெண் இருப்பாள். வேலை நேரம் போக வெளியே வந்து கிரில் கேட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருப்பாள். சில சமயம் படியில் அமர்ந்திருப்பாள். இந்த பரபரப்பான நகரத்திற்கும் அவளது பாவாடை தாவணிக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும். போகும்போதும் வரும்போதும் பார்ப்பேன். சில நேரங்களில் அவள் புன்னகைப்பாள். பார்க்காததுபோல் இருந்துவிடுவேன். அருகில் இருக்கும் பழக்கடையில்  பழங்கள் வாங்குவேன். அந்த கடைக்காரம்மா இல்லாதபோது இவள் கடையில் நிற்பாள். அப்படிப்பட்ட தருணங்களில் நான் அங்கே பழம் வாங்குவதில்லை.

ஒரு முறை அந்த கடைக்காரம்மா வரட்டும் என்று வெகுநேரம் நின்றிருந்தேன். "உங்க பேரென்ன" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. பழம் வாங்காமலேயே திரும்பிவிட்டேன். ஒரு மழைநாளில் விடுதி வாசலில் ஒதுங்கி நின்றபோது "உங்க செல்ஃபோன் நெம்பர் தரீங்களா" என்றாள். "எதற்கு" என்றேன். "குடுங்க, பேசும்போது சொல்றேன்" என்றாள். நான் தூறலில் நனைந்துகொண்டே வந்துவிட்டேன். அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. மற்ற நேரங்களில் அவளை நினைத்ததில்லை. அந்த இடத்தை கடக்கும்போது மட்டுமே அவள் நினைவுக்கு வருவாள். அவள் இருந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். அவள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லாவிட்டால், நடந்துகொண்டே வேறெங்கும் இருக்கிறாளா என்று பார்ப்பேன்.

ஒரு முறை என் அறைக்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பியபோது இவள் எதிரே வந்தாள். "உங்க வீடு இங்கேதானா" என்றாள். "ஆமாம்" என்றேன். "எது" என்றாள். நான் பதில் பேசவில்லை. அவள் என் அறையை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக காரணமே இல்லாமல் லுங்கி பனியனோடு அடுத்த தெருவரை நடந்துவிட்டு திரும்பினேன்.

இப்படியாக ஐந்தாறு வருடங்களாயிற்று.

இன்று இரவு சாப்பிட்டுவிட்டு திரும்பும்போது அந்த பெண்  நின்றுகொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக விடுதியை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தாள். நான் வருவதைப் பார்த்ததும் ஒரு முறை நேருக்கு நேர் என்னை பார்த்தாள், பின் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். நான் வழக்கம்போல் கடந்து வந்துவிட்டேன். சில அடிகள் நடந்த பிறகுதான் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

அந்த விடுதிக்கு அருகே ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது.  கட்டில், மெத்தை, ஏஸி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். லாரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விடுதியை காலி செய்கிறார்கள் என்பது உரைத்தது. திரும்பி வந்து அங்கே நின்றேன்.  யாரிடம் என்ன கேட்பது? தலையில் பொருளை சுமந்தவாறு என்ன என்பது போல் தலைநீட்டி ஒருவர் என்னைப் பார்த்தார். தயக்கத்துடன் "அந்த பொண்ணு..." என்றேன். "யாரு நான்ஸியா..?"  "ஆமாம்" என்றேன். அவர் சுமையை லாரியில் நின்றவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த பொருள் எடுக்க உள்ளே சென்றுவிட்டார். அவர் தகவல் சொல்லி அவள் வெளியே வருவாள் என நினைத்தேன். அடுத்தடுத்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றேன். அந்த பெண் வெளியே வரவே இல்லை. தொடர்ந்து நிற்கும்போதுதான் "சுரீர்" என்றது. ஒருவேளை அந்த பெண் வெளியே வந்தாலும் நான் என்ன பேசப்போகிறேன்.? பதில் தோன்றவில்லை. என்னையறியாமல் என் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினேன். மனம் சுமைகூடி இருந்தது.

-மணிபாரதி துறையூர்

Monday, May 21, 2012

சுமை

ஓரிரவுப் பயணமாய் இருந்தாலும்
இரண்டு பகல் ஓரிரவு நீளும்
தொலைதூரப் பயணங்களாய் இருந்தாலும்
துரத்தும் உன் நினைவுகளை
எதிர்காற்றில் ஊதி உதறிவிடும் எண்ணத்தில்
ஜன்னல் இருக்கைகளையே
தேடித் தேடி அமர்கிறேன்.

புகைவண்டியின்
கனத்த சுவாசம் போல் நீண்டு
நெடுங்காலமாய் என்னை
துரத்திக்கொண்டே தொடர்கின்றன

ஒவ்வொரு பயணத்திலும்
உன் நினைவுகள்

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்..
ஆயிரம் கேள்விகளின்
சுமை அழுத்த
தொடர்கின்றன என் பயணங்கள்..
ஏதேனும் ஒரு வடநாட்டு வழித்தடத்தில்
இருண்ட குகைக்குள்
ரயில் பயணிக்கையில்
வரம் போல்
வைரம் போல்
வனதேவதை போல்
என்னருகில் வந்தமர்வாயா...

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்...

-மணிபாரதி துறையூர்

Thursday, May 10, 2012

வாழ்க்கைப் பாடம் # 1 (அக்கறை)


என் அப்பா பள்ளி ஆசிரியர். வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடம் எடுப்பார். பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்று மாலை எங்களுக்கு சொல்வார். சிறு வயதில் புரியாத சில விசயங்கள் இப்போது நினைத்துப்பார்க்கும்போது மிகப்பெரிய படிப்பினையைத் தருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்.

வழக்கம்போல் அன்றும் என் அப்பா பள்ளிக்கு சென்றார். காலை அணிவகுப்பு, கொடியேற்றம் முடிந்ததும் பதினோறாம் வகுப்பு வரலாறு பிரிவு மாணவர்களில் சிலர் (ரெளடி கும்பல்) ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். தமிழாசிரியர் எல்லோர் முன்னிலையிலும் பதினோறாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனிடம் (குமார்) மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவர்கள் எழுப்பிய பிரச்சனை. தமிழாசிரியர் "நான் எதுவும் தவறாக சொல்லவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணம் துளி கூட இல்லை" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

தலைமை ஆசிரியர் இந்த பிரச்சனையில் தலையிட விருப்பமில்லாமல் விலகிக்கொண்டார். இப்போது தமிழாசிரியருக்கு ஆதரவாக என் அப்பாவும் சக ஆசிரியர்களும் மட்டுமே. இன்று இந்த பிரச்சனையை எழுப்பும் மாணவர்களுக்கு வகுப்பு நடக்காமல் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. அதனால் ஒரு 10 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இந்த பிரச்சனைக்கு ஆதரவு தரவில்லை. எனினும் காலை அணிவகுப்பில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டுவிட்டதால் அது 1000 மாணவர்களுக்கும் 50 ஆசிரியர்களுக்கும் தெரிந்த விஷயம் ஆகிவிட்டது. தமிழாசிரியர் 1000 மாணவர்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்பது மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. தலைமை ஆசிரியர் பிரச்சனையில் இருந்து விலகிக்கொண்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

பதினோறாம் வகுப்பில் என் அக்காவும் ஒரு மாணவி. அப்பா என் அக்காவை அழைத்து பிரச்சனையை தெரிந்துகொண்டார். பிரச்சனை இதுதான். ரெளடி கும்பல் மாணவர்கள் முன் தினம் நடந்த தமிழ் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. நன்றாக படிக்கும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன் குமார் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவன். அவனும் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. அதற்கு காரணம் இந்த ரெளடி கும்பல் மாணவர்களின் தூண்டல். ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களின் மேல் எப்போதுமே தனி பாசம் இருக்கும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் கூடுதல் உரிமையோடு அவர்களை கண்டிப்பார்கள். அந்த கோபத்தில் “அந்த நொண்டிப்பயலும் அவனுங்களோட சேர்ந்துக்கிட்டானா?” என்கிற தொனியில் கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் இப்படி கேட்டதை சிறப்பு வகுப்பிற்கு வந்த யாரோ ஒருவர் ரெளடி கும்பலுக்கு கோள் சொல்லிவிட்டனர். சிறப்பு வகுப்பிற்கு வராத மாணவர்களின் மேல் தமிழ் ஆசிரியர் மறுநாள் (இன்று) நடவடிக்கை எடுப்பார் என்பதால் அதற்கு முன்பாகவே இந்த பிரச்சனையை எழுப்பி தப்பிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

பிரச்சனையை புரிந்துகொண்ட என் அப்பா, ரெளடி கும்பல் மாணவர்களை அழைத்து ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் நொண்டி என்று சொன்னதால் எங்கள் நண்பன் மனம் புண்பட்டிருக்கிறான் அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். உடல் ஊனமுற்ற மாணவனும் அந்த கும்பலில் இப்போது நின்றுகொண்டிருக்கிறான்.


என் அப்பா அவர்களிடம், ”தமிழாசிரியர் குமாரை நொண்டி என்று சொன்னபோது அங்கே குமார் இல்லை. நீங்கள் உண்மையிலேயே உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று நினைத்திருந்தால் தமிழாசிரியர் அவனை நொண்டி என்று சொன்னதைப்போய் குமாரிடம் சொல்லியே இருக்கக் கூடாது. அப்போதுதான் உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் உங்களுக்கு தமிழாசிரியருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது, அவரைப் பழி வாங்குவதற்காக உங்கள் நண்பனை பகடைக்காய் ஆக்கி தமிழாசிரியர் உன்னை நொண்டி என்று சொல்லிவிட்டார் அவரை மன்னிப்பு கேட்ட வைக்கிறோம் என்று பிரச்சனை கிளப்புகிறீர்கள். உங்களது உண்மையான எண்ணம் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்பதல்ல. தமிழாசிரியரை பழிவாங்க வேண்டும் என்பதுதான்” என்று சொன்னதும் ரெளடி கும்பல் பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட்டார்கள்.

என் அப்பா குமாரிடம் திரும்பி “நீ புத்திசாலி மாணவன், இவர்களின் எண்ணம் உனக்கு புரிவதாய் இருந்தால் ஒழுங்காக வகுப்பிற்குப் போ இல்லை என்றால் நாங்கள் இவர்களை (ரெளடி கும்பல்) கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் இனி உன்னையும் கண்டுகொள்ளமாட்டோம்.” என்று சொல்லிவிட்டார். குமார் அங்கிருந்து விலகி வகுப்பிற்கு சென்றுவிட்டான். பிரச்சனை தீர்ந்துவிட்டது. எல்லோருக்கும் நிம்மதி.

-மணிபாரதி துறையூர்

Sunday, March 11, 2012

எருதின் நோய்


வெய்யில் காலங்களில்
வீட்டுக்கு வருபவர்கள்
ஏசி இல்லையா எனும்போதும்
வேலை கிடைத்தவன்
இன்னுமா இண்ட்டர்வியூக்கு எல்லாம் போறே எனும்போதும்
கார்பைக் வைத்திருப்பவன்
எப்படித்தான் பஸ்லே போறியோ
எனும்போதும்
பழகிப்போய்விட்டது
மெளனமாய் இருக்கவும்
புன்னகைக்கவும்

எனினும்
புன்னகைக்கவோ
பேச்சை மாற்றவோ
கடினமாகத்தான் இருக்கிறது
திருமணப் பத்திரிக்கை வைக்க வந்தவன்
எட்டு வருசமா இதையேதான் சொல்ற
இன்னுமா உனக்கு பொண்ணு தேடுறாங்க
எனும்போது மட்டும்.


-மணிபாரதி துறையூர்

Sunday, August 21, 2011

வாசனை

தலைவலித் தைல வாசனை வரும்போதெல்லாம்
அக்காவின் நினைவு
பல்லி கெக்கரிக்கும் போதெல்லாம்
அம்மாவின் நினைவு
ஆறிய பாலைக் குடிக்க நேரும்போதெல்லாம்
அப்பாவின் நினைவு
ரயில்களைப் பார்க்கும்போதெல்லாம்
அண்ணனின் நினைவு
வாழ்த்து அட்டை வாங்கும்போதெல்லாம்
தோழிகள் நினைவு
மேன்ஷன்களைப் பார்க்கும்போதெல்லாம்
நண்பர்கள் நினைவு

கால ஓட்டத்தில்
இடம் மாறி, திசைமாறி
தூர தூர தேசங்களில்
குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும்
துரத்தும் நினைவுகளில்
மறக்கவே முடியாத மனிதர்கள் 
வந்து வந்து போகிறார்கள்

உள்ளீடற்ற எதிர்மறை நிஜங்களைவிட
எப்போதும் மேலானவை
திரும்பக் கிடைக்காத நேர்மறை நினைவுகளின்
வாசனை

-மணிபாரதி துறையூர்

Monday, March 28, 2011

நத்தை


சுவாரஸ்யம் ஏதுமின்றி
நத்தை போல்
நகர்ந்துகொண்டிருந்த நாட்களில்
நம் சந்திப்பு தீர்மானிக்கப்பட்டது
நம்மை மீறிய சக்திகளால்
அதன் பின் என் நாட்கள்
நம் சந்திப்பை முன்னிருத்தியே திட்டமிடப்பட்டன

நிறைய செலவழித்தேன்
விரும்பி வாங்கினேன் விதவிதமாய்
உடைகள், கண்ணாடி, காலணி
இரண்டு நாட்களாய் உறக்கமில்லை
முடி திருத்திக்கொண்டேன்
மீண்டும் மீண்டும் தலைகோதிப் பார்த்தேன்
அடிக்கடி கண்ணாடி பார்த்தேன்
அடிக்கடி புன்னகைத்தேன்

உன்னிடம் என்ன பேசுவது
ஒத்திகை பார்த்தேன்
கடற்கரை, நிலா, மெல்லிசை, கவிதைகள்
உனக்கும் பிடிக்குமா
என் குரல் உன்னை வசீகரிக்குமா
எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்லும்
என் கண்கள், மீசை உன்னையும் கவருமா
என் perfume உனக்குப் பிடிக்குமா
என்ன உடை அணிவது
புத்தாடையா
எனக்கு மிகவும் பிடித்த உடையா
சிறுபிள்ளைத்தனமான
சின்ன சின்ன குழப்பங்கள்
இதுபோல்
உனக்கும் இருக்குமா..
இருந்ததா...
மீண்டும் குழப்பம்

ஏமாற்றங்கள் எனக்கு புதிதில்லை
எனினும்
நீ எப்படி தாங்கிக் கொள்வாயோ...
நம்மை மீறிய சக்திகளால்
ஒத்திப் போடப்பட்ட நம் சந்திப்பு
இனி ஒருபோதும் நிகழாது
நிகழவே நிகழாதென்பதை

நத்தை போல்
நகரத்தொடங்கிவிட்டது வாழ்க்கை
மீண்டும்...

என் அறையின்
இருண்ட மூலைகளிலேயே
என் perfume, கண்கள், மீசை
விமர்சிக்க யாருமின்றி
மட்கக் கடவது
மட்கக் கடவது


--மணிபாரதி துறையூர்

Sunday, February 13, 2011

பரிசு

உனக்கு பரிசளிக்க
கவிதைகள் ஏதும் 
மீதமில்லை
இனி 
அவசரத்தில் 
அரைகுறையாய்
எழுதும் 
எண்ணமுமில்லை
வேண்டுமென்றால் வா
சேர்ந்து எழுதலாம்
காதலர் தினத்தில்...

No more poems left out

To gift you
Cannot pen
Fragmentary lines
In an urgency
If you need one
Come let us write together
On Valentine’s Day...

Tuesday, August 24, 2010

போராட்டம்


நிராகரிக்கப்படுபவர்களும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்
நிராகரிப்பவர்களின்
சமவெளியிலேயே
வடுக்களோடும்
வலிகளோடும்
வைராக்கியங்களோடும்.

-மணிபாரதி துறையூர்


Tuesday, June 29, 2010

என்ன செய்வது..?

உனது அலட்சியம் ஒன்றும்
புதிதில்லை என்றாலும்
ஒவ்வொரு முறை நீ
எட்டி உதைக்கும்போதும்
துடிதுடித்துப்போகிறது
உன்னையே சுற்றி வரும்
எனது நாய்க்குட்டி மனசு